தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3342

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4

அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், திண்ணமாக இல்யாஸும் இறைத் தூதர்களில் ஒருவராயிருந்தார். அவர் தம் சமூகத்தாரிடம் இவ்வாறு கூறிய சந்தர்ப்பத்தை நினைத்துப்பாருங்கள்: நீங்கள் அஞ்சுவதில்லையா? பஅல் என்னும் (கற்பனைத்) தெய்வத்தை நீங்கள் அழைக்கிறீர்கள்.

படைப்பாளர்களிலெல்லாம் மிகச் சிறந்தவனை விட்டு விடுகிறீர்களே- (அதாவது,) உங்கள் அதிபதியும், உங்களுக்கு முன் சென்றவர்களின் அதிபதியுமான அல்லாஹ்வை (விட்டுவிடுகிறீர்களே)! ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். ஆகையால், திண்ணமாக அவர்கள் (இப்போது தண்டனைக்காகக்) கொண்டு வரப்படுபவர்களாய் உள்ளனர். ஆனால், வாய்மையாளர்களாய் ஆக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர. மேலும், பின் தோன்றிய தலை முறைகளில் இல்யாஸ் மீது (நற்புகழை) நிலைப்படுத்தினோம். (37:123-129)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது (ஓர் அறிவிப்பில்), இல்யாஸ் (அலை) அவர்கள் (பிற்காலத் தலைமுறையினரால்) நல்ல விதமாகப் புகழ்ந்து பேசப்படுவார்கள் என்பது இதன் பொருளாகும் எனக் கூறியுள்ளார்கள்.

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:

சாந்தி உண்டாகட்டும், இல்யாஸ் மீது! நன்மை செய்வோருக்கு நாம் இத்தகைய பிரதி பலனையே வழங்குகின்றோம். உண்மையில் நம்மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் ஒருவராய் அவர் திகழ்ந்தார். (37:130-132)

இல்யாஸ் (அலை) அவர்கள் தாம் இத்ரீஸ் (அலை) அவர்கள் ஆவார் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மற்றும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்டுகிறது.

பாடம் : 5

இத்ரீஸ் (அலை) அவர்கள் பற்றிய குறிப்பு.

இத்ரீஸ் (அலை) அவர்கள் நூஹ் (அலை) அவர்களுடைய தந்தையின் (முப்)பாட்டனார் ஆவார். இவர்கள் நூஹ் (அலை) அவர்களுடைய பாட்டனார் என்றும் சொல்லப்படுகின்றது.

மேலும், அல்லாஹ் கூறுகிறான்: நாம் அவரை (இத்ரீஸை) உயர்ந்த இடத்திற்கு உயர்த்திக் கொண்டோம் (19:57)

 அபூ தர்(ரலி) அறிவித்து வந்ததாக அனஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை (முகடு) பிளக்கப்பட்டது. (அங்கிருந்து வானவர்) ஜிப்ரீல் அவர்கள் இறங்கி (வந்து) என் நெஞ்சைப் பிளந்தார்கள். பிறகு அதை, ‘ஸம்ஸம்’ தண்ணீரால் கழுவினார்கள். பிறகு, நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத்தட்டு ஒன்றைக்கொண்டு வந்து என் நெஞ்சில் அதை ஊற்றி (நிரப்பி)னார்கள். பிறகு, என் கையைப் பிடித்து என்னை அழைத்துக் கொண்டு வானத்திற்கு ஏறினார்கள்.

(பூமிக்கு) அண்மையிலுள்ள வானத்திற்கு வந்தபோது வானத்தின் காவலரிடம், ‘திறங்கள்’ என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘யார் அது?’ என்று கேட்டார். ஜிப்ரீல் அவர்கள், ‘இதோ ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ‘உங்களுடன் வேறெவராவது இருக்கிறரா?’ என்று கேட்டார். அவர்கள், ‘என்னுடன் முஹம்மத் அவர்கள் இருக்கிறார்கள்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ‘(அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா?’ என்று கேட்க, ஜிப்ரீல் அவர்கள், ‘ஆம், திறவுங்கள்’ என்று கூறினார்கள்.

(முதல் வானத்தின் கதவு திறக்கப்பட்டு) நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒருவர் இருந்தார். அவரின் வலப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். இடப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தன்னுடைய வலப்பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தன்னுடைய இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) ‘நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!’ என்று கூறினார். நான் “ஜிப்ரீலே! இவர் யார்” என்று கேட்டேன். அவர், ‘இவர் ஆதம் (அலை) அவர்கள்; அவர்களின் வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள் அவர்களின் சந்ததிகள். அவர்களில் வலப்பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப்பக்கத்தில் இருப்பவர்கள் நரக வாசிகள். எனவே, தான் அவர்கள் வலப்பக்கம் (சொர்க்கவாசிகளான) தம் மக்களை பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப்பக்கம் (நரக வாசிகளான தம் மக்களைப்) பார்க்கும்போது (வேதனைப்பட்டு) அழுகிறார்கள்’ என்று பதிலளித்தார்கள்.

பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் (இன்னும் உயரத்திற்கு) ஏறிச் சென்றார்கள். பிறகு, இரண்டாம் வானத்திற்கு வந்து அதன் காவலரிடம், ‘திறவுங்கள்’ என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதில் கூறிய பின்னர் வாயிலைத்) திறந்தார்.

அனஸ்(ரலி) தொடர்ந்து கூறினார்கள்:

‘நபி(ஸல்) அவர்கள், வானங்களில் இத்ரீஸ்(அலை), ஈசா(அலை) இப்ராஹீம்(அலை) ஆகியோரைக் கண்டதாகக் கூறினார்களே தவிர அவர்களின் இருப்பிடங்கள் எங்கிருந்தன என்று அவர்கள் எனக்குக் குறிப்பிட்டுக் கூறவில்லை. அவர்கள் ஆதம்(அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்) வானத்தில் கண்டதாகவும் இப்ராஹீம்(அலை) அவர்களை ஆறாவது வானத்தில் கண்டதாகவும் மட்டுமே கூறினார்கள்’ என்று அபூ தர்(ரலி) கூறினார்.

அனஸ்(ரலி) மேலும் கூறினார்கள்:

‘ஜிப்ரீல்(அலை) அவர்கள் இத்ரீஸ்(அலை) அவர்களைக் கடந்து சென்றபோது, ‘நல்ல இறைத் தூதரே வருக! நல்ல சகோதரரே வருக!’ என்று கூறினார்கள். நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், ‘இவர் இத்ரீஸ் என்று கூறினார்கள். பிறகு மூஸா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், ‘நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக’ என்று கூறினார்கள். நான், ‘இவர் யார்?’ என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அவர்கள், ‘இவர் மூஸா’ என்று கூறினார்கள்.

பிறகு நான் ஈசா அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், ‘நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக!’ என்று கூறினார்கள். நான், ‘இவர் யார்?’ என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், ‘(இவர்) ஈசா’ என்று பதிலளித்தார்கள். பிறகு நான் இப்ராஹீம் அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், ‘நல்ல நபியே, வருக! நல்ல மகனே, வருக!’ என்று கூறினார்கள். நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு, ‘இவர் இப்ராஹீம்’ என்று ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்தார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி), அபூ ஹய்யா(ரலி) ஆகிய இருவரும் அறிவித்ததாக இப்னு ஹஸ்ம்(ரஹ்) கூறினார்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிறகு ஜிப்ரீல் அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு மேலே சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்திற்கு வந்தபோது அங்கு நான் (வானவர்கள் விதிகளை எழுதிக் கொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.

இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களும் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களும் கூறினார்கள்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்போது அல்லாஹ் என்மீது (என் சமுதாய்யத்தாருக்காக) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கினான். அதைப்பெற்றுக் கொண்டு நான் திரும்பியபோது மூஸா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது மூஸா அவர்கள், ‘உங்கள் சமுதாயத்தவர் மீது என்ன கடமையாக்கப்பட்டது’ என்று கேட்டார்கள். நான், ‘அவர்களின் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன’ என்று பதிலளித்தேன். அவர்கள், ‘அப்படியானால் உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று (சற்று குறைத்துக் கடமையாக்கும்படி) கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது’ என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி) கேட்டேன். அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான்.

மூஸா அவர்களிடம் திரும்பிச் சென்ற போது, உங்கள் இறைவனிடம் திரும்பி ச் செல்லுங்கள்’ என்று கூறி, முன்பு போல் (‘உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது’) என்று கூறினார்கள். (நான் அவ்வாறே திரும்ப இறைவனிடம் சென்று இன்னும் குறைக்கும்படி கோர) அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். நான் மூஸா அவர்களிடம் சென்று, மீண்டும் கூறியபோது, ‘உங்களுடைய இறைவனிடம் திரும்பச் சென்று இன்னும் குறைத்துக் கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தார் அதற்கு சக்தி பெறமாட்டார்கள்’ என்று கூற, நான் திரும்பிச் சென்று, என் இறைவனிடம் (இன்னும் சற்று குறைக்கும்படி) கேட்டேன். அதற்கு அவன், ‘அவை ஐந்து (வேளைத் தொழுகைகள்) ஆகும். அவையே (பிரதிபலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். (ஒரு முறை சொல்லப்பட்ட சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை’ என்று கூறினான்.

உடனே, நான் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். அவர்கள், ‘உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்’ என்று கூறினார்கள். நான், ‘என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகிறேன்’ என்று பதிலளித்தேன். பிறகு ஜிப்ரீல் அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு (வானுலகின் எல்லையான) ‘சித்ரத்துல முன்தஹா’வுக்குச் சென்றார்கள். அப்போது அவையென்னவென்று நான் அறிய முடியாத படி பல வண்ணங்கள் அதைச் சூழ்ந்து மூடியிருந்தன. பிறகு நான் உள்ளே அனுமதிக்கப்பட்டேன். அப்போது அங்கே முத்தாலான கூடாரங்களைக் கண்டேன். அதன் மண் (நறுமணம் வீசும்) கஸ்தூரியாக இருந்தது.
Book : 60

(புகாரி: 3342)

بَابُ {وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ المُرْسَلِينَ إِذْ قَالَ لِقَوْمِهِ أَلاَ تَتَّقُونَ أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ الخَالِقِينَ} [الصافات: 124] (اللَّهُ رَبُّكُمْ وَرَبُّ آبَائِكُمُ الأَوَّلِينَ) {فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ. إِلَّا عِبَادَ اللَّهِ المُخْلَصِينَ. وَتَرَكْنَا عَلَيْهِ فِي الآخِرِينَ} [الصافات: 127]

قَالَ ابْنُ عَبَّاسٍ «يُذْكَرُ بِخَيْرٍ (سَلاَمٌ عَلَى آلِ يَاسِينَ إِنَّا كَذَلِكَ نَجْزِي المُحْسِنِينَ إِنَّهُ مِنْ عِبَادِنَا المُؤْمِنِينَ)» يُذْكَرُ عَنْ ابْنِ مَسْعُودٍ وَابْنِ عَبَّاسٍ أَنَّ إِلْيَاسَ هُوَ إِدْرِيسُ

بَابُ ذِكْرِ إِدْرِيسَ عَلَيْهِ السَّلاَمُ

وَهُوَ جَدُّ أَبِي نُوحٍ، وَيُقَالُ جَدُّ نُوحٍ عَلَيْهِمَا السَّلاَمُ، وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَرَفَعْنَاهُ مَكَانًا عَلِيًّا} [مريم: 57]

حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، ح حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ كَانَ أَبُو ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

فُرِجَ سَقْفُ بَيْتِي وَأَنَا بِمَكَّةَ، فَنَزَلَ جِبْرِيلُ فَفَرَجَ صَدْرِي، ثُمَّ غَسَلَهُ بِمَاءِ زَمْزَمَ، ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ، مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا، فَأَفْرَغَهَا فِي صَدْرِي، ثُمَّ أَطْبَقَهُ، ثُمَّ أَخَذَ بِيَدِي فَعَرَجَ بِي إِلَى السَّمَاءِ، فَلَمَّا جَاءَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا  قَالَ جِبْرِيلُ لِخَازِنِ السَّمَاءِ: افْتَحْ، قَالَ مَنْ هَذَا؟ قَالَ هَذَا جِبْرِيلُ قَالَ: مَعَكَ أَحَدٌ قَالَ: مَعِي مُحَمَّدٌ، قَالَ أُرْسِلَ إِلَيْهِ؟ قَالَ: نَعَمْ فَافْتَحْ، فَلَمَّا عَلَوْنَا السَّمَاءَ الدُّنْيَا إِذَا رَجُلٌ عَنْ يَمِينِهِ أَسْوِدَةٌ، وَعَنْ يَسَارِهِ أَسْوِدَةٌ، فَإِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى، فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالِابْنِ الصَّالِحِ، قُلْتُ مَنْ هَذَا يَا جِبْرِيلُ؟ قَالَ: هَذَا آدَمُ وَهَذِهِ الأَسْوِدَةُ عَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ نَسَمُ بَنِيهِ، فَأَهْلُ اليَمِينِ مِنْهُمْ أَهْلُ الجَنَّةِ، وَالأَسْوِدَةُ الَّتِي عَنْ شِمَالِهِ أَهْلُ النَّارِ، فَإِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى، ثُمَّ عَرَجَ بِي جِبْرِيلُ حَتَّى أَتَى السَّمَاءَ الثَّانِيَةَ، فَقَالَ لِخَازِنِهَا: افْتَحْ، فَقَالَ لَهُ خَازِنُهَا مِثْلَ مَا قَالَ الأَوَّلُ فَفَتَحَ ” قَالَ أَنَسٌ: فَذَكَرَ أَنَّهُ وَجَدَ فِي السَّمَوَاتِ إِدْرِيسَ، وَمُوسَى، وَعِيسَى، وَإِبْرَاهِيمَ وَلَمْ يُثْبِتْ لِي كَيْفَ مَنَازِلُهُمْ، غَيْرَ أَنَّهُ قَدْ ذَكَرَ: أَنَّهُ وَجَدَ آدَمَ فِي السَّمَاءِ الدُّنْيَا، وَإِبْرَاهِيمَ فِي السَّادِسَةِ، وَقَالَ أَنَسٌ: فَلَمَّا مَرَّ جِبْرِيلُ بِإِدْرِيسَ قَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ، فَقُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا إِدْرِيسُ، ثُمَّ مَرَرْتُ بِمُوسَى فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ، قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا مُوسَى، ثُمَّ مَرَرْتُ بِعِيسَى فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ، قُلْتُ مَنْ هَذَا قَالَ عِيسَى، ثُمَّ مَرَرْتُ بِإِبْرَاهِيمَ فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالِابْنِ الصَّالِحِ، قُلْتُ مَنْ هَذَا، قَالَ: هَذَا إِبْرَاهِيمُ ” قَالَ: وَأَخْبَرَنِي ابْنُ حَزْمٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، وَأَبَا حَيَّةَ الأَنْصَارِيَّ، كَانَا يَقُولاَنِ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ثُمَّ عُرِجَ بِي، حَتَّى ظَهَرْتُ لِمُسْتَوًى أَسْمَعُ صَرِيفَ الأَقْلاَمِ»، قَالَ ابْنُ حَزْمٍ، وَأَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” فَفَرَضَ اللَّهُ عَلَيَّ خَمْسِينَ صَلاَةً، فَرَجَعْتُ بِذَلِكَ حَتَّى أَمُرَّ بِمُوسَى، فَقَالَ: مُوسَى مَا الَّذِي فَرَضَ عَلَى أُمَّتِكَ؟ قُلْتُ: فَرَضَ عَلَيْهِمْ خَمْسِينَ صَلاَةً، قَالَ: فَرَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ، فَرَجَعْتُ فَرَاجَعْتُ رَبِّي فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَى مُوسَى، فَقَالَ رَاجِعْ رَبَّكَ: فَذَكَرَ مِثْلَهُ، فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَى مُوسَى فَأَخْبَرْتُهُ فَقَالَ: رَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ، فَرَجَعْتُ فَرَاجَعْتُ رَبِّي، فَقَالَ: هِيَ خَمْسٌ وَهِيَ خَمْسُونَ، لاَ يُبَدَّلُ القَوْلُ لَدَيَّ، فَرَجَعْتُ إِلَى مُوسَى، فَقَالَ رَاجِعْ رَبَّكَ، فَقُلْتُ: قَدِ اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي، ثُمَّ انْطَلَقَ حَتَّى أَتَى بِي السِّدْرَةَ المُنْتَهَى، فَغَشِيَهَا أَلْوَانٌ لاَ أَدْرِي مَا هِيَ ، ثُمَّ أُدْخِلْتُ الجَنَّةَ، فَإِذَا فِيهَا جَنَابِذُ اللُّؤْلُؤِ، وَإِذَا تُرَابُهَا المِسْكُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.