தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3344

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

அலீ(ரலி) (யமனிலிருந்து) நபி(ஸல்) அவர்களிடம் சிறிய தங்கக் கட்டி ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் அக்ரவு இப்னு ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷியீ(ரலி), உயைனா இப்னு பத்ர் அல் ஃபஸாரீ(ரலி), பனூ நப்ஹான் குலத்தவரில் ஒருவரான ஸைத் அத் தாயீ(ரலி) மற்றும் பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா இப்னு உலாஸா அல் ஆமிரி(ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள். அதனால் குறைஷிகளும் அன்சாரிகளும கோபமடைந்து, ‘நஜ்து வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கிறார்; நம்மை விட்டுவிடுகிறாரே’ என்று கூறினார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இவர்கள் (இப்போது தான் இஸ்லாத்தை தழுவியிருப்பதால்) அவர்களின் உள்ளங்களை (முழுமையாக) இணக்கமாக்குவதற்காக (அவர்களுடன் நேசம் பாராட்டும் விதத்தில்) தான் கொடுத்தேன்’ என்று கூறினார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் தடித்திருந்த, நெற்றியோரங்கள் உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் முன் வந்து, ‘முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’ என்று கூறினார்.

உடனே நபி(ஸல்) அவர்கள் ‘நானே (அல்லாஹ்விற்கு) மாறு செய்தால் வேறெவர்தான் அவனுக்குக் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்களின் விஷயத்தில் அல்லாஹ் என் மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என் மீது நம்பிக்கை வைக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அப்போது வேறொருமனிதர் இப்படி (குறை சொன்னவரைக் கொல்வதற்கு அனுமதி கேட்டார். அனுமதி கேட்ட அவர் காலித் இப்னு வலீத்(ரலி) தாம் என்று நினைக்கிறேன். அவரை நபி(ஸல்) அவர்கள் (இதைச் சொன்னவரைக் கொல்ல வேண்டாமென்று) தடுத்துவிட்டார்கள். (குறை சொன்ன) அந்த ஆள் திரும்பிச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள், ‘இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து .. அல்லது இவரின் பின்னே – ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர்.

அவர்கள் எத்தகையவர்களாயிருப்பார்கள் என்றால், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளை தாண்டிச் செல்லாது. அவர்கள் வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்தப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள்; இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்; சிலை வணக்கம் புரிபவர்களைவிட்டு விடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் ‘ஆத்’ கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்து விடுவேன்’ என்று கூறினார்கள்.
Book :60

(புகாரி: 3344)

قَالَ: وَقَالَ ابْنُ كَثِيرٍ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

بَعَثَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ، إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذُهَيْبَةٍ فَقَسَمَهَا بَيْنَ الأَرْبَعَةِ الأَقْرَعِ بْنِ حَابِسٍ الحَنْظَلِيِّ، ثُمَّ المُجَاشِعِيِّ، وَعُيَيْنَةَ بْنِ بَدْرٍ الفَزَارِيِّ، وَزَيْدٍ الطَّائِيِّ، ثُمَّ أَحَدِ بَنِي نَبْهَانَ، وَعَلْقَمَةَ بْنِ عُلاَثَةَ العَامِرِيِّ، ثُمَّ أَحَدِ بَنِي كِلاَبٍ، فَغَضِبَتْ قُرَيْشٌ، وَالأَنْصَارُ، قَالُوا: يُعْطِي صَنَادِيدَ أَهْلِ نَجْدٍ وَيَدَعُنَا، قَالَ: «إِنَّمَا أَتَأَلَّفُهُمْ». فَأَقْبَلَ رَجُلٌ غَائِرُ العَيْنَيْنِ، مُشْرِفُ الوَجْنَتَيْنِ، نَاتِئُ الجَبِينِ، كَثُّ اللِّحْيَةِ مَحْلُوقٌ، فَقَالَ: اتَّقِ اللَّهَ يَا مُحَمَّدُ، فَقَالَ: «مَنْ يُطِعِ اللَّهَ إِذَا عَصَيْتُ؟ أَيَأْمَنُنِي اللَّهُ عَلَى أَهْلِ الأَرْضِ فَلاَ تَأْمَنُونِي» فَسَأَلَهُ رَجُلٌ قَتْلَهُ، – أَحْسِبُهُ خَالِدَ بْنَ الوَلِيدِ – فَمَنَعَهُ، فَلَمَّا وَلَّى قَالَ: ” إِنَّ مِنْ ضِئْضِئِ هَذَا، أَوْ: فِي عَقِبِ هَذَا قَوْمًا يَقْرَءُونَ القُرْآنَ لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ، يَقْتُلُونَ أَهْلَ الإِسْلاَمِ وَيَدَعُونَ أَهْلَ الأَوْثَانِ، لَئِنْ أَنَا أَدْرَكْتُهُمْ لَأَقْتُلَنَّهُمْ قَتْلَ عَادٍ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.