தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4480

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6

(நபியே!) நீங்கள் சொல்லுங்கள்: எவர் ஜிப்ரீலுக்குப் பகைவரோ (அவர் அல்லாஹ்வுக்கும் பகைவரே). ஏனெனில், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்கவே இ(வ்வேதத்)தை உங்களது இதயத்தில் இறக்கி வைத்தார். (இவ்வேதம்) தனக்கு முன்னிருந்த வேதங்களை உண்மைப்படுத்துவதுடன், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தியாகவும் நேர்வழியாகவும் விளங்குகிறது எனும் (2:97ஆவது) இறை வசனம்.

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

(ஜிப்ரயீல், மீக்காயில், இஸ்ராஃபீல் ஆகிய வானவர்களின் பெயர்களில் தொடக் கத்திலுள்ள) ஜப்ர், மீக்,சராஃப் ஆகியன அடிமை எனும் பொருளுடையவை. இறுதியில் உள்ள ஈல் எனும் சொல்லுக்கு அல்லாஹ் என்று பொருள். (அதாவது அல்லாஹ்வின் அடியார் என்பது இவற்றின் பொருளாகும்.)

 அனஸ் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்திருக்கும் செய்தி (யூத அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்களுக்கு, அவர்கள் ஒரு (தோட்ட) நிலத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது எட்டியது. உடனே அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்’ என்று கூறினார்கள்.

பிறகு, ‘1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?

2. சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு எது?

3. குழந்தை தன் தந்தையின் சாயலில், அல்லது தாயின் சாயலில் இருப்பது எதனால்?’ என்று கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘சற்று முன்புதான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்’ என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், ‘ஜிப்ரீலா (தங்களுக்குத் தெரிவித்தார்!’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளிக்க, ‘வானவர்களிலேயே ஜிப்ரீல்தாம் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!’ என்று அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘ஜிப்ரீலுக்குப் பகைவர் அல்லாஹ்வுக்கும் பகைவராவார். ஏனெனில், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்கவே இ(வ்வேதத்)தை உங்களின் இதயத்தில் இறக்கி வைத்தார்’ என்று (நபியே) கூறும் எனும் இந்த (திருக்குர்ஆன் 02:97வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

பிறகு, ‘அறிக! இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம், ஒரு நெருப்பாகும். அது கிழக்கிலிருந்து மக்களை(த் துரத்திக்கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும். அறிக! சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு, பெரிய மீனின் ஈரல் பகுதியிலுள்ள கூடுதலான சதையாகும். (குழந்தை தந்தையின் சாயலில், அல்லது தாயின் சாயலில் அமையக் காரணம், ஓர் ஆண் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது) ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (கருமுட்டை உயிரணுவை) முந்திவிட்டால் குழந்தை அவனுடைய சாயலைப் பெறுகிறது. பெண்ணின் நீர் கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளுடைய சாயலைப் பெறுகிறது’ என்று பதிலளித்தார்கள்.

(உடனே) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை’ என்று நான் உறுதி அளிக்கிறேன். தாங்கள் இறைத்தூதர்தாம் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்’ என்று கூறினார்கள். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் (என்னைப் பற்றி) அவர்களிடம் விசாரித்து (அறிந்து) கொள்வதற்கு முன்பாக, நான் இஸ்லாத்தை ஏற்றதை அவர்கள் அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத் தங்களிடம் பொய்யுரைப்பார்கள்’ என்று கூறினார்கள்.

அப்போது யூதர்கள் வந்தனர். (உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம் (ரலி) அறைக்குள் சென்று மறைந்து கொண்டார்கள்.) பிறகு, நபி (ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), ‘உங்களில் அப்துல்லாஹ் இப்னு சலாம் எத்தகைய மனிதர்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் புதல்வருமாவார்; எங்கள் தலைவரும், எங்கள் தலைவரின் புதல்வருமாவார்’ என்று பதிலளித்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு சலாம் இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், ‘அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!’ என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம் (ரலி) வெளியே வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்’ என்று கூறினார்கள்.

உடனே யூதர்கள், ‘இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனுமாவார்’ என்று அப்துல்லாஹ் இப்னு சலாமைக் குறித்துக் குறை கூறினர். அப்துல்லாஹ் இப்னு சலாம் (ரலி), ‘இதைத்தான் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள்.
Book : 65

(புகாரி: 4480)

بَابُ {مَنْ كَانَ عَدُوًّا لِجِبْرِيلَ} [البقرة: 97]

وَقَالَ عِكْرِمَةُ: جَبْرَ وَمِيكَ وَسَرَافِ: عَبْدٌ، إِيلْ: اللَّهُ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ بَكْرٍ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ

سَمِعَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ، بِقُدُومِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهْوَ فِي أَرْضٍ يَخْتَرِفُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي سَائِلُكَ عَنْ ثَلاَثٍ لاَ يَعْلَمُهُنَّ إِلَّا نَبِيٌّ: فَمَا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ؟، وَمَا أَوَّلُ طَعَامِ أَهْلِ الجَنَّةِ؟، وَمَا يَنْزِعُ الوَلَدُ إِلَى أَبِيهِ أَوْ إِلَى أُمِّهِ؟ قَالَ: «أَخْبَرَنِي بِهِنَّ جِبْرِيلُ آنِفًا» قَالَ: جِبْرِيلُ؟: قَالَ: «نَعَمْ»، قَالَ: ذَاكَ عَدُوُّ اليَهُودِ مِنَ المَلاَئِكَةِ، فَقَرَأَ هَذِهِ الآيَةَ: {مَنْ كَانَ عَدُوًّا لِجِبْرِيلَ فَإِنَّهُ نَزَّلَهُ عَلَى قَلْبِكَ بِإِذْنِ اللَّهِ} [البقرة: 97].

«أَمَّا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ فَنَارٌ تَحْشُرُ النَّاسَ مِنَ المَشْرِقِ إِلَى المَغْرِبِ، وَأَمَّا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الجَنَّةِ فَزِيَادَةُ كَبِدِ حُوتٍ، وَإِذَا سَبَقَ مَاءُ الرَّجُلِ مَاءَ المَرْأَةِ نَزَعَ الوَلَدَ، وَإِذَا سَبَقَ مَاءُ المَرْأَةِ نَزَعَتْ»، قَالَ: أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ، يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اليَهُودَ قَوْمٌ بُهُتٌ، وَإِنَّهُمْ إِنْ يَعْلَمُوا بِإِسْلاَمِي قَبْلَ أَنْ تَسْأَلَهُمْ يَبْهَتُونِي،

فَجَاءَتِ اليَهُودُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّ رَجُلٍ عَبْدُ اللَّهِ فِيكُمْ». قَالُوا: خَيْرُنَا وَابْنُ خَيْرِنَا، وَسَيِّدُنَا وَابْنُ سَيِّدِنَا، قَالَ: «أَرَأَيْتُمْ إِنْ أَسْلَمَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ». فَقَالُوا: أَعَاذَهُ اللَّهُ مِنْ ذَلِكَ، فَخَرَجَ عَبْدُ اللَّهِ فَقَالَ: أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَقَالُوا: شَرُّنَا وَابْنُ شَرِّنَا، وَانْتَقَصُوهُ، قَالَ: فَهَذَا الَّذِي كُنْتُ أَخَافُ يَا رَسُولَ اللَّهِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.